மீளவும் எழுதுவோம்....

Wednesday, June 2, 2010

மழலைச் சிரிப்பு
மௌன ராகங்கள்
இனியும் வேண்டாம்.
ஊமையாய் போன எம் உணர்வுகளை எழுதுவோம்
சரித்திரங்களை மீளவும் மீளவும் எழுதுவோம்
அந்நியராட்சியில் வாழும் முந்தி வந்த தமிழை எழுதுவோம்
ஆயுதங்களால் முடிக்கப்பட்ட எம் தலையெழுத்தை எழுதுவோம்
புதைகுழியில் நின்று மீட்கப்பட்ட தமிழராய் இருந்து எழுதுவோம்
வானமே பிளந்து எங்களை அள்ளிய
வரலாற்று கதையெல்லாம் எழுதுவோம்
மண்ணை முத்தமிட்ட எம்மினத் தமிழர்கள் பற்றி எழுதுவோம்
கூண்டோடு அழிக்கப்பட்ட எம்மினத்தை பற்றி எழுதுவோம்
வீழ்ந்து விட்டோம் என்றோருக்கு முன்னால்
வாழ்ந்து காட்ட எம் வீரக்கதையெல்லாம் எழுதுவோம்
சாயங்கள் பூசாமல் உண்மைகளை எழுதுவோம்
அடுத்த தலைமுறைக்கு
எழுத்துக்களில் சொல்லிவிட்டு போவோம்
நாம் சாகடிக்கப்பட்ட சரித்திரங்களை!
அவர்கள் கட்டியெழுப்ப வேண்டிய தமிழினத்தை!

புதுமுகம் ஓர் அறிமுகம்

Thursday, April 22, 2010

சமூக சிந்தனை கொண்ட நாம் முக்கியமாக தமிழர்களாகிய நாம் , தற்போதைய அரசியல் ,சமூக சூழ்நிலைகளுக்கேட்ப எம்மை வடிவமைத்து செயற்பட வேண்டிய கட்டாயமான ஒரு தவிர்க்கமுடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம் .அதன் வகிபாகத்தை செவ்வனே செய்து முடிக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு அத்துடன் ஒவ்வொரு மனிதநேயம் கொண்ட மனிதனுக்கும் உண்டு .அந்த வகையில் சமூகநீதி , தமிழர்நலன் , மனிதநேயம் என்ற மூன்று முக்கிய நோக்கங்களிளின் அடிப்படையில் ஒரே கொள்கையுடைய நாம் அரசியல்,பிராந்திய,வர்க்க ,மத ,இன பேதங்களை கடந்து ஒரேதிசையில் பயணிக்க ,ஜனநாயக முறையில் செயற்பட முனைந்துள்ளோம் .
இதற்காக எமது குழுமம் "வாதிகள் " என்ற இந்த பதிவை கட்டமைத்துள்ளது .எமது எழுத்துக்கள் எமது செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கையில் உள்ளோம் .
எமது வாதிகள் குழுமம் இந்த பதிவின் செயற்பாடுகளை எதிர்வரும் காலங்களில் மிகுந்த நேர்த்தியாகவும் , எம்மக்களின் நலனுக்காகவும் சிறந்த முறையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது .இதற்க்காக உங்களின் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வேண்டி நிற்கிறது. எமது பதிவு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் நடுவுநிலைமையிலிருந்து விலகாது , மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பாக தொழிற்படும் என்பதையும் இத்தருணம் உறுதி செய்து கொள்கிறோம் .

மேலும் , நாம் சமூக உணர்வுள்ள மனிதர்களையும்,செயற்பாடுகளையும் மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ,படைப்புக்களையும் உள்வாங்கிக்கொள்வதற்கு ஆர்வமாகவுள்ளோம் .எமது எண்ணங்கள் சிறந்த முறையில் எழுத்துக்களாக வெளிப்பட உங்களது வரவேற்பையும் வேண்டிநிற்கின்றோம் .நாம் எமது அரசியல் சூல்நிலைகளுக்கேட்ப எமது மக்களின் நலனை கருத்திற்கொண்டு மாறுபட்ட கொள்கைகளை வகுத்து அரசியல் வாதிகள் முதல் சாதாரண பொதுமக்களின் செயற்பாடுகளிலும் , எண்ணங்களிலும் ஒரு புதிய ஜனநாயக வேட்கையினையும் , அபிவிருத்திக்கான செயற்பாடுகளையும் , தமிழருக்கான நலன்களையும் பெற்றுக்கொள்ள எம்மாலான உந்துதலை மக்களின் முகவர்களாக இருந்து மிகச்சிறந்த முறையில் முன்னெடுப்போம் என்பது உறுதி !